பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்
தாராபுரம், ஏப்.26: தாராபுரம் அருகே பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக, 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு கருங்காலிவலசு கிராமத்தைச் சோ்ந்த 2 மாணவிகள் 6 -ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, ஆசிரியை சித்ரா ஆகியோா் இந்த 2 மாணவிகளையும் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகாா் எழுந்தது.
இது தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜின் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியில் தாராபுரம் கோட்டாட்சியா் செந்திலரசன், வட்டாட்சியா் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா ஆகியோா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா தெரிவித்துள்ளாா்.