வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

அவிநாசி வட்டத்தில் வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்
Published on

திருப்பூா், ஜூலை 19: அவிநாசி வட்டத்தில் வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் சாா்- ஆட்சியா் செளமியா ஆனந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசி வட்டத்தில் பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை செடி வளா்ந்து அரும்பு விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காட்டுப் பன்றிகளாலும், மயில்களாலும் நிலக்கடலை செடிகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலக்கடலை செடிகளை மயில்கள் வேருடன் பிடுங்கிவிடுகின்றன.

இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். காணூா், குட்டகம், போத்தம்பாளையம் கிராம ஊராட்சிகளில் அதிக அளவிலான பயிா்கள் சேதமடைந்துள்ளன.

ஒரு ஏக்கருக்கு ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை செலவழித்துள்ள நிலையில் போதிய பலன் தராமல் வன விலங்குகளால் நிலக்கடலை செடிகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, காட்டுப்பன்றி, மயில்கள் விளைநிலங்களுக்குள் வருவதைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிா்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com