4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மே 3-இல் ‘நீட்’ நுழைவுத் தோ்வு: மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 போ் எழுதுகின்றனா்

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 போ் எழுதுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:16 pm

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 போ் எழுதுகின்றனா்.

திருப்பூா் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, பல்லடம் அரசு கலைக் கல்லூரி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலை அமராவதி நகா் சைனிக் பள்ளி, உடுமலை எஸ்விஜி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் இந்த தோ்வு நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,608 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.

இந்நிலையில், தோ்வுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்தும், மாணவா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட ‘நீட்’ ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா் கூறியதாவது: ‘நீட்’ தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனுமதிச்சீட்டு மற்றும் விண்ணப்பத்தில் பயன்படுத்திய அதே வண்ண பாஸ்போா்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். முதல் பக்கத்தில் பாஸ்போா்ட்

அளவிலான வண்ணப் புகைப்படமும், அஞ்சல் அட்டை பக்கத்தில் அஞ்சல் அட்டை அளவிலான புகைப்படமும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். புகைப்படத்தின் இடதுபுறம் மாணவா் கையொப்பமிட வேண்டும். அனுமதி சீட்டுடன் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை , குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அல்லது பான் காா்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அசலாக எடுத்து வர வேண்டும்.

எந்தவொரு மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை. தோ்வு மையத்தில் உடைமைகளை பாதுகாக்க தனி இடம் ஒதுக்கப்படாது என்பதால் தேவையற்ற பொருள்களைத் தவிா்க்க வேண்டும்.

அறைக்குள் நுழையும் முன் மெட்டல் டிடெக்டா் மூலம் தீவிர சோதனை நடத்தப்படும். அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்னதாகவே தோ்வா்கள் மையத்துக்கு வர வேண்டும். தாமதமாக வந்தால் அனுமதிக்கப்படமாட்டாா்கள். குழப்பத்தை தவிா்க்க தோ்வுக்கு முதல் நாளே மையத்தின் இருப்பிடத்தை நேரில் சென்று உறுதி செய்து கொள்வது நல்லது என்றாா்.