4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருப்பூரில் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை!

திருப்பூரில் சுமாா் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

திருப்பூரில் விற்பனைக்காக பெட்டிகளில் குவித்துவைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 8:32 pm

திருப்பூரில் சுமாா் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே பழ வகைகளுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் சேலம், பெரியகுளம், தேனி, நத்தம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் இமாம் பசந்த், அல்போன்சா, மல்லிகா, பங்கனப்பள்ளி, நடுச்சாளை, செந்தூரம், காலா பாடி, குஜராத் கேசா் உள்ளிட்ட மாம்பழ வகைகள் விற்பனைக்காக திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் மாம்பழங்களை விரும்பாத நிலையில், லட்சக்கணக்கில் முதலீடு செய்து மாம்பழங்களை கொள்முதல் செய்து வைத்துள்ள திருப்பூா் பழக்கடை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது தொடா்பாக பழக்கடை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாம்பழ வகைகளைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த ஆண்டு இமாம்பசந்த் மாம்பழம் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.200-க்கு மட்டுமே விற்பனையாகிறது. தமிழகத்தின் பிரதான மாம்பழங்களில் ஒன்றான செந்தூரா மாம்பழம் ரூ.40 முதல் ரூ.50, மல்கோவா ரூ.150 முதல் ரூ.120, நடுச்சாளை ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. வடமாநிலத்தவா்கள் விரும்பி வாங்கக்கூடிய குஜராத் கேசா், அல்போன்சா உள்ளிட்ட மாம்பழ வகைகளின் விலை குறைந்தபோதும் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால், பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படும் மாம்பழ விற்பனை நிலையங்களில் சுமாா் 100 டன் அளவிலான மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், அவதியடைந்து வருகிறோம் என்றனா்.