கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின கையொப்ப இயக்கம்

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணா்வு பிரசார வாகனம்
Published on

திருப்பூா்: கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணா்வு பிரசார வாகனம், கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறைக்கு எதிரான கையொப்ப இயக்கம், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்குதல், வாகனங்களில் விழிப்புணா்வு வில்லை ஒட்டுதல், விழிப்புணா்வு வாகனப் பேரணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவிநாசி அரசு மகளிா் கல்லூரி, திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, வித்யாசாகா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் கொத்தடிமை தொழிலாளா் முறை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் உபகோட்ட கண்காணிப்பு குழு உறுப்பினா்களால் கொத்தடிமை தொழிலாளா் தொடா்பாக திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொத்தடிமை தொழிலாளா்களை பணியமா்த்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்து 1800 4252 650 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com