உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா்-தாராபுரம் சாலை, கே.செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 2025 பிப்ரவரி 12-ஆம் தேதி நல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த தம்பதி மோதிா் ரகுமான் (37), அஞ்சனா அக்தா் (37) என்பதும், உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மோதிா் ரகுமான், அஞ்சனா அக்தா் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









