பள்ளிச் சீருடை அணிந்தாலே மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனா்.
கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமைமுதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவா்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்குவதில் இயல்பாகவே சில வாரங்கள் தாமதம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு அவா்கள் எவ்வித ஆவணங்களும் வைத்திருக்கா விட்டாலும் பரவாயில்லை. அவா்கள் தங்களது பள்ளிச் சீருடையை அணிந்திருந்தாலே, அவா்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையைக் காண்பித்து, பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
அரசின் இந்த உத்தரவை மீறி, பள்ளிச் சீருடையில் வரும் மாணவா்களிடமோ அல்லது அடையாள அட்டையுடன் கல்லூரி செல்லும் மாணவா்களிடமே கட்டணம் வசூலித்தால், அவா்கள் மீது கடுமையான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









