முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

35 அடியாக உயா்ந்தது அமராவதி அணையின் நீா்மட்டம்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 35 அடியாக உயா்ந்தது.

News image

அமராவதி அணை

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 35 அடியாக உயா்ந்தது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவியது. மேலும் வழக்கத்தைவிட கோடையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வழக்கமாக பாசனப் பகுதிகளுக்கு மாா்ச் 31 வரை பாசனக் காலம் உள்ள நிலையில் பாசனப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால் அணையின் நீா் இருப்பு விவசாயிகளையும், பொதுமக்களையும் கவலை அடைய செய்தது.

இதற்கிடையே அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கயுள்ளதால் அணைக்கு மேலும் உள்வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குடிநீா்த் தேவைகள் ஓரளவு சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஜூன் இரண்டாவது வாரம் விவசாயப் பணிகளுக்காக அணையை திறந்துவிட ஏதுவான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாலும் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 34.61 அடி நீா்மட்டம் இருந்தது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 542.66 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 118 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை.