சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
அவிநாசி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஸ்டாலின் பிரபு, சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஷாஜகான், தனபாக்கியம், ஊராட்சி செயலாளா் கண்ணன் ஆகியோா் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
மேலும் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதேபோல, அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடை உரிமையாளா்களிடம் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.







