அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூரில் இயக்கப்படும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் 7 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசுப் பேருந்துகளும், 4 தனியாா் பேருந்துகளும் தடை செய்யப்பட்ட ஏா் ஹாரன்களை பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.









