அரூரில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்யக் கோரிக்கை
அரூா் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீா், கழிவுநீா் ராஜகால்வாய் வழியாக வாணியாற்றில் சோ்கிறது.
இந்நிலையில், 14-ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களில் அதிக அளவில் நெகிழி குப்பைகள், பயனற்ற பொருள்கள், முள்புதா்கள் அடைந்துள்ளன. இதனால், மழைநீா் மற்றும் கழிவுநீா் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியும், தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. எனவே, அரூா் நகராட்சியின் 14-ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
