தடையற்ற விற்பனையை தடுப்பார் இல்லை "காலாவதி'யால் வரும் அவதி

தருமபுரி, டிச. 17: தருமபுரி நகரில் காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள்  விற்பனை எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் அதிகளவில் நடைபெறுகிறது. பொட்டலப் பொருள்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதிகூட இல்ல
Updated on
2 min read

தருமபுரி, டிச. 17: தருமபுரி நகரில் காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள்  விற்பனை எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் அதிகளவில் நடைபெறுகிறது.

பொட்டலப் பொருள்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதிகூட இல்லாமல் பல உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தருமபுரி நகரப் பேருந்துநிலையம், புறநகர்ப் பேருந்துநிலையப் பகுதிகளில் விற்கப்படும் சிப்ஸ், முறுக்கு, கார வகைகள், இனிப்பு வகைகள், பிஸ்கட், ரொட்டி, பிரட் உள்ளிட்ட பொட்டலப் பொருள்களில் பெரும்பாலானவற்றில் உற்பத்தி தேதியே இல்லை.

 இதேபோல், நேதாஜி பை-பாஸ் சாலை, நான்கு ரோடு, வெண்ணாம்பட்டி சாலை, ரயில்நிலையம், அரசு மருத்துவமனை சுற்று வட்டாரப் பகுதிகள் என பல இடங்களில் உள்ள பழக்கடைகள், பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகளில் பெரும்பாலானவை

காலாவதியானவை.

பாட்டில்களில் உற்பத்தி தேதியானது மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தேதி இடம் பெற்றுள்ளன. மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்திட வேண்டும் என்ற குறிப்பு மிகச் சிறிய எழுத்தில் லேபிளில் அச்சிடப்பட்டுள்ளது.

இது குறித்து, தருமபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் கே.எம். அண்ணாமலை கூறியது:

தருமபுரி நகரில் உள்ள உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் பெரும்பாலானவை நுகர்வோர் நலன் பேணுவதில் அக்கறை செலுத்துவதில்லை. காலாவதி குளிர்பானங்கள், தரமற்ற பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது மட்டுமல்லாது சுகாதாரமற்ற முறையிலேயே உணவுப் பொருள்கள் உற்பத்தியும், விற்பனையும் உள்ளது. இதனை பயன்படுத்தும் நுகர்வோர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவச் செலவு மட்டுமல்லாது மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

பொட்டல உணவுப் பொருள்களின் மீது அச்சிடப்படும் உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை நுகர்வோர் அனைவருக்கும் தெரியும் வகையில் பெரிய எழுத்துகளில் அச்சிட வேண்டும். நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் வரையிலும் புகார் மனு அளித்துள்ளோம். ஆனால், எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஆய்வு செய்கின்றனர். வாரம் ஒருமுறையோ, மாதம் ஒரு முறையோ அனைத்து கடைகளிலும் ஆய்வு நடத்தி காலாவதி பொருள்கள் கைப்பற்றப்பட்டால் மட்டுமே நுகர்வோர் நலன் தொடர்ந்து காக்கப்படும் என்றார் அவர்.

குடல், வயிறு தொந்தரவு: காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களையோ, குளிர்பானங்களையோ நுகர்வோர் உட்கொள்ளும்போது பெரும்பாலும் வயிறு மற்றும் குடல் தொடர்பான உபாதைகளே ஏற்படும். காலரா, வாந்தி, பேதி பாதிப்பு ஏற்படும் என்கிறார் தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் என்.அய்யனார்.

தருமபுரி மாவட்ட வழங்கல் அலுவலர் பி.சுப்ரமணி கூறுகையில், நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட வழங்கல் நிர்வாக உதவியை நாடினாலும் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து கடைகளில் சோதனை நடத்தத் தயாராக உள்ளோம் என்றார்.

 தருமபுரி நகராட்சி ஆணையர் எஸ்.அண்ணாதுரை கூறுகையில், நகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com