தருமபுரி, நவ. 25: தருமபுரி மாவட்டத்தில் கல்வியறிவு இல்லாத 3 லட்சம் மகளிரை 2012-ம் ஆண்டுக்குள் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்ற 4,620 பேர் கொண்ட குழு களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் எழுத்தறிவு விழுக்காடு 73.45 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 82.42 விழுக்காடும், பெண்கள் 64.43 விழுக்காடுமாக உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் எழுத்தறிவு விழுக்காடு 61.39 ஆக உள்ளது. இதில், வயது வந்த பெண்களின் எழுத்தறிவு 41.63 விழுக்காடாக உள்ளது.
15 வயதுக்கு மேற்பட்டவர்களில் மகளிர் எழுத்தறிவு 50 விழுக்காடுக்கும் குறைவாகக் காணப்படும் மாவட்டங்களில் தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தால் "கற்கும் பாரதம் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதி 75:25 விகிதத்தில் ஒதுக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 2001-ம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 12,95,189 ஆக உள்ளது. இதில், பெண்களில் கல்லாதோர் 43.63 விழுக்காடாக உள்ளனர்.
எனவே, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, தருமபுரி, பென்னாகரம் ஆகிய 8 ஒன்றியங்களில் "கற்கும் பாரதம் திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 251 வயது வந்தோர் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம் 51,234 ஆண்கள், 3,58,646 பெண்கள் பயன்பெறவுள்ளனர்.
தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், மாநில எழுத்தறிவு முனைப்பு ஆணையம், மாவட்ட அளவிலான எழுத்தறிவு குழுமம், ஒன்றிய அளவிலான எழுத்தறிவுக் குழுமம், கிராம அளவிலான எழுத்தறிவுக் குழுமம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் செயலாரகவும், மாவட்டக் கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பாளருமாக செயல்படுகின்றனர்.
மத்திய அரசு ரூ. 10,44 கோடி, மாநில அரசு ரூ. 3.48 கோடி என மொத்தம் ரூ. 13.92 கோடி செலவிடப்படவுள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ. 2.16 கோடி ஒதுக்கீடு செய்து எழுத்தறிவுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
251 வயதுவந்தோர் கல்வி மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கல்வி கற்றுத் தரப்படுகிறது. பயனாளிகள் அவரவர் வசதிக்கேற்ற நேரத்தில் அடிப்படைக் கல்வியறிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மையத்தில் உள்ள ஒரு பொறுப்பாளர் 30 எழுத்தறிவற்றவர்களுக்கு கல்வி கற்றுத் தருவர். இவை தவிர, படித்த இளைஞர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் என 4,118 பேர் தன்னார்வலர்களாக நியமிக்கப்ட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 10 நபர்களுக்கு எழுத்தறிவும், எண்ணறிவும் அளிக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படும். குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், முஸ்லிம் மகளிர் ஆகியோருக்கு எழுத்தறிவும், எண்ணறிவும் அளிக்கப்படுகிறது.
புதிதாக கற்போருக்கு சமநிலைக் கல்வி மூலம் பள்ளிக் கல்விக்கு இணையான கல்வி கற்றுத் தரப்படும். மேலும், கல்வியுடன் சேர்ந்து தொழில்கல்விப் பயிற்சி (சிறுதொழில்கள்) அளித்து கல்லாதோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எழுத்தறிவில் ஆண், பெண் இருபாலருக்கான ஏற்றத் தாழ்வுகளை குறைத்து 2012-ம் ஆண்டுக்குள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் மகளிரை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றுவதே இத் திட்டத்தின் சீரிய பணியாகும்.
2012 இலக்கை நோக்கி...
தருமபுரி மாவட்டத்தில் 2012-ம் ஆண்டுக்குள் 3,58,646 பேரை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் இலக்கை நோக்கிய பணிகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.
8 ஒன்றியங்களில் இதுவரை, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகியவற்றில் கற்போரை தக்க வைக்க தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சிக்கான "சத்ய மைத்ரேயன்' விருதை 2010-ம் ஆண்டுக்கு நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட டொக்குபோதனஹள்ளி பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு மாநில அளவில் சிறந்த மாவட்டத்துக்கான விருதையும் தருமபுரி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.