அரசு உயர்நிலைப் பள்ளிக்காக ரூ.25 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது நாகர்கூடல் ஊராட்சி.
இந்த ஊராட்சியில் இருந்த தொடக்கப் பள்ளியில் நாகர்கூடல், கழனிகாட்டூர், அவ்வைநகர், மூசக்கவுண்டன்கொட்டாய், செங்கன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளிக் குழந்தைகள் கல்வி பயின்றனர். 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், 10-ஆம் வகுப்பு வரையோ அல்லது அதற்கு மேலோ கல்வி பயில தொலைவிடத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.
எனவே, தொடக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, 2008-09-இல் இந்தப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்ததால், மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கிராமத்துக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தனியாரிடமிருந்த நிலத்தை கிராம மக்கள் உதவியுடனும், ஊராட்சி நிர்வாக உதவியுடனும் பெற்று பள்ளிக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ், 2010-11-ஆம் நிதியாண்டில் 3 வகுப்பறைகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் ரூ.10.50 லட்சத்தில் கட்டப்பட்டது.
அதனருகிலேயே நீர் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்டது. இதேபோல, ரூ.2.70 லட்சத்தில் மாணவர்களுக்கான கழிப்பறை, ரூ.2.10 லட்சத்தில் மாணவிகளுக்கான கழிப்பறை, ரூ.25 ஆயிரத்தில் குடிநீர்த் தொட்டி ஆகியவையும் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டன. இதேபோல, பள்ளிக்கு சுற்றுச் சுவரும் ரூ.5.60 லட்சத்தில் 2011-12-ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டது.
ஆனால், பள்ளி இன்னும் இங்கு செயல்படவில்லை. இதனால், கட்டடங்கள் அனைத்தும் வெறும் காட்சிப் பொருளாகவே நிற்கின்றன.
2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தாமல் உள்ளதால் இந்தப் பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகிவிட்டது. அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டும் புதிய கட்டடத்துக்கு பள்ளி மாணவர்கள் மாற்றப்படவில்லை.
தொடக்கப் பள்ளி இயங்கி வந்த பழைய கட்டடத்திலேயே 4 வகுப்பைறைகளில் உயர்நிலைப் பள்ளிக்கான 7 வகுப்புகளை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. 3 வகுப்புகள் மரத்தடி நிழலிலேயே நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக, நாகர்கூடல் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சுமதி முருகேசன் கூறியது:
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மேலும், கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் மலைப் பகுதியில் இருப்பதால் ஆசிரியர்களும் புதிய கட்டடத்துக்குச் செல்லத் தயங்குகின்றனர். பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு இல்லை. அரசியல் பாகுபாடின்றி கட்டடத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள கரடு, முரடான பகுதிகளை நிரவி சமன்படுத்த வேண்டும். கூடுதல் கட்டடம் கட்ட ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதுதொடர்பாக, பள்ளித் தலைமையாசிரியர் திருமுருகன் கூறியது:
புதிய கட்டடத்தில் 3 வகுப்புகள் மட்டுமே செயல்படுத்த முடியும். புதிய கட்டடத்தில் சில வகுப்புகளும், பழைய கட்டடத்தில் சில வகுப்புகளும் நடத்த இயலாது. இடப்பற்றாக்குறை இருந்தாலும் இப்போதுள்ள கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன. புதிய கட்டடத்தில் கூடுதல் கட்டடமோ, தாற்காலிக ஷெட் போன்ற அமைப்புகளோ ஏற்படுத்தித் தந்தால், புதிய கட்டடத்துக்குச் செல்ல ஆசிரியர்கள் உள்பட அனைவரும் தயாராகவுள்ளோம். பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்றார் அவர்.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியது:
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் அனைத்துக்குமே கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கி வருகிறது. நாகர்கூடல் ஊராட்சி உயர்நிலைப் பள்ளிக்கும் கூடுதல் கட்டடம் கட்ட அரசிடம் நிதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.