தருமபுரி, ஜூலை 30: தருமபுரி அருகே ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) முதல் கூடுதலாக 4 ஆசிரியர்கள் தாற்காலிகமாகப் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஓ) செ. அமுதவல்லி திங்கள்கிழமை அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இந்த ஏற்பாட்டை செய்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பாரப்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் உள்ளது பள்ளிப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கரியப்பனஹள்ளி கிராமத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே மாற்றுப் பணியிலேயே ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். மாற்றுப் பணி என்பதால் அவர்களும் விருப்பம் போலவே பள்ளிக்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியரே ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புப் பாடம் நடத்தும் நிலை இருந்து வந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வந்தனர்.
இது குறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி கூறியது:
எனது குழந்தை உள்பட எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருமே இந்தப் பள்ளியில்தான் கல்வி பயின்று வருகின்றனர். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் தினமும் பள்ளிக்கு வந்துவிட்டு ஏதாவது ஒரு பாடத்தை மட்டும் ஒரு வாரத்துக்குக் கற்று வருகின்றனர். பள்ளி நேரத்தில் காலை முதல் மாலை வரை 5 பாடங்களுக்கான வகுப்புகளை நடத்த வேண்டும். ஆனால், 5 பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. இதனால், ஒரேயொரு ஆசிரியரே பாடம் நடத்தும் நிலையுள்ளது என்றார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த குப்பன் கூறியது: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ளது. பள்ளி நிர்வாகத் தரப்பில் மாவட்டக் கல்வித் துறை கவனத்துக்கு கொண்டு செல்கின்றனரா என்பதே தெரியவில்லை. எனவே, பெற்றோர்கள், கிராம மக்கள், மாணவர்கள் அனைவரையும் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்தோம் என்றார்.
பொதுமக்கள் திரண்டு ஆட்சியர் அலுவலகத்குக்கு திங்கள்கிழமை வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி, அந்தப் பள்ளிக்கு திங்கள்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இதர ஆசிரியர்கள் மாற்றுப் பணி மூலமே நியமிக்கப்பட்டு வந்தனர். அவர்களும் பணிமாற்றம், பொதுமாறுதல் கலந்தாய்வு என பல்வேறு காரணங்களால் மாறுதலாகிச் சென்றுவிட்டனர். உயர்நிலைப் பள்ளிக்கு தலைமயாசிரியரும் இல்லை. தலைமையாசிரியர்தான் காலிப் பணியிட விவரங்களை மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிவிப்பர். அவரும் மாறுதலாகிச் செல்லும் போது உரிய விவரங்களை அளிக்கவில்லை. எனவே, இங்கு பணியிடம் பூர்த்தி செய்யப்படவில்லை.
இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் இங்கு ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களுக்குத் தாற்காலிகமாக ஆசிரியர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்தியுள்ளோம்.
பணிநிரவல், பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளியில் கூடுதலாக ஓர் ஆசிரியரும், உயர்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்களும் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.