சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு 13 மாவட்டங்களில் கலைக்குழு பிரசாரத்துக்குத் தயாராகும் "கேரவன்'!

சிறார் திருமணத்தைத் தடுக்கும் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு இதுவரை மேற்கொண்டு வந்த பிரசார உத்திகளை மேம்படுத்தி, கூடுதல் ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட
Updated on
1 min read

சிறார் திருமணத்தைத் தடுக்கும் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு இதுவரை மேற்கொண்டு வந்த பிரசார உத்திகளை மேம்படுத்தி, கூடுதல் ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட "கேரவன்' மூலம் 13 மாவட்டங்களில் முதல் கட்ட கலைக் குழுப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்கிறது "யுனிசெப்' நிறுவனம்.
 சிறார் திருமணம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளும், தகவலின் பேரில் அரசுத் துறை அலுவலர்களின் தடுப்பு நடவடிக்கைகளும் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், 18 வயதுக்கு முந்தைய பெண்ணின் திருமணம் முழுமையாகத் தடுக்க முடியாததாகவே தொடர்ந்து வருகிறது.
 தமிழகத்தில் சிறார் திருமணத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பிரதான பணிகளை மேற்கொண்டு வரும் "யுனிசெப்' நிறுவனம் தற்போது, பிரசார உத்தியை தற்போது நவீனப்படுத்தியிருக்கிறது.
 வரும் செப். 12ஆம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த பிரசாரப் பயணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 இதுவரையில்லாத வகையில், அழகுற- விழிப்புணர்வு வாசகங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள "கேரவன்' வேனில் விழிப்புணர்வுக் குறும்படங்களைத் திரையிடுவதற்காக எல்இடி டிவி ஒரு பகுதியில் இருக்கும். இன்னொரு பகுதியில் விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் மேடையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் "யுனிசெப்' குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜி. குமரேசன்.
 ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 நாள்கள் தங்கி தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. பிரசார "கேரவன்' வாகனம் செல்லும் முதல் நாள், மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மற்றொரு வாகனம் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும்.
 "கேரவன்' வேன் பிரசாரத்தின் போதே, அப்பகுதி மக்களிடம் சிறார் திருமண விழிப்புணர்வு உறுதிமொழி பெறும் ஒட்டுவில்லைகளும் (ஸ்டிக்கர்) தயாராகி வருகின்றன. அதில் "18 வயதுக்கு முன் நான் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்' என சிறார்கள் கையெழுத்திடும் வகையிலும், "சிறார் திருமணத்தை எங்கள் ஊரில் ஆதரிக்க மாட்டோம்' என பொதுமக்கள் கையெழுத்திடும் வகையிலும், "சிறார் திருமணத்தை எங்கள் மகளுக்கு செய்ய மாட்டோம்' என பெற்றோர் கையெழுத்திடும் வகையிலும் உள்ளது.
 மேலும், "கேரவன்' பிரசாரம் நடைபெறும் அதே பகுதியில் சிறார் திருமணம் தொடர்பான செய்திகளைக் கொண்ட கண்காட்சி வடிவிலான தாற்காலிக ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.
 கூடுதலாக, இந்த பிரசாரத்தின் போது விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகளை உடலில் மாட்டிக் கொண்ட நபர்களும் கிராமங்களில் வலம் வரவுள்ளனர். முதல் கட்டமாக 13 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட பயணம், சிறிய இடைவெளிக்குப் பிறகு, எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் விரைவில் நடத்தப்படும் என்கிறார் ஜி. குமரேசன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com