எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்வதைவிட அவற்றில் சிலவற்றையாவது சரி செய்ய முயற்சிப்பதே மேல் என்றார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் .
தருமபுரி தமிழ்ச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடித் திங்கள் சிறப்பு நிகழ்ச்சியில், "தமிழமுது' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
அம்மா என்று அருந்தமிழில் அழைப்பதைக் காட்டிலும் "மம்மி' என அழைப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். நாவைச் சுழற்றிப் பாடும் பாடல் தாலாட்டு.
இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடும் பெற்றோரைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. எறும்பு தின்னக் கண் தெரியும் என்ற பழமொழியின் பொருள் எறும்புகளுக்கும் உணவிட்டு வாழுதல் என்பதாகும். இப்போது வீடுகளில் மாக்கோலம் போடுவதில்லை.
கடை வீதிகளில் தமிழ் இல்லை. கற்பித்தலில் தமிழ் இல்லை. தமிழே படிக்காமல் உயர்கல்விக்குச் செல்லும் நிலையும் தமிழ்நாட்டில்தான் ஏற்பட்டிருக்கிறது. தமிழைத் தமிழர்களே போற்றுவதில்லை. இவ்வாறு எல்லாவற்றையும் அனுமதித்துக் கொண்டே சென்றால் தமிழ் தேய்ந்து கொண்டே இருக்கும்.
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டே செல்வதைக் காட்டிலும், சிலவற்றையாவது சரி செய்ய முயற்சிப்பதே மேல். அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட வேண்டும், முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கு. காமராஜர்.
அதிக நோபல் பரிசுகளை வென்ற நாடு ஜெர்மனி. அந்த நாட்டில் ஜெர்மானிய மொழியைத் தவிர வேறெந்த மொழியும் கிடையாது. எனவே, தமிழ்ச் சங்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பயிலுங்கள், தவறில்லை; ஆனால், மற்ற பாடங்களை தாய்மொழியாம் தமிழில் பயிலுங்கள் என மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் குமரிஅனந்தன்.
கூட்டத்துக்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ந. இராசேந்திரன் தலைமை வகித்தார். செயலர் வ. செளந்திரபாண்டியன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் பொ. சச்சிதானந்தம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







