தருமபுரி அருகே மின்சார கம்பி உரசியதால் வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற வாகனம் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள எல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த குமரவேலின் மகன் கிரி(26). இவர், தனது மினி லாரியில் வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு, விழுப்புரத்திலிருந்து தருமபுரி மாவட்டம், இண்டூர் நோக்கி சென்றார். வைக்கோலை இறக்கிய நிலையில், மீதம் உள்ள வைக்கோலுடன், தருமபுரி அருகே உள்ள வெண்ணாம்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
வெண்ணாம்பட்டி அருகே மினி லாரி சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள மின்சார கம்பியில் வைக்கோல் உரசியது. இதில் ஏற்பட்ட தீயானது, வண்டி முழுவதும் பரவியது. தகவல் அறிந்த, தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வைக்கோல் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தீக்காயம் அடைந்த ஓட்டுநர் கிரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








