இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம், வணிக வளாகம் கட்டும் பணி

Published on

தருமபுரியில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 1.50 கோடியில் உதவி ஆணையா் அலுவலகம், ரூ. 1.14 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணிகளை காணொலி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தருமபுரி வெள்ளேக்கவுண்டன்பாளையம், அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில் ரூ. 1.50 கோடியில் இரண்டு தளங்களுடன் கூடிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் கட்டும் பணி மற்றும் தருமபுரி சிவசுப்ரமணிய சுவாமி கோயில் நிலத்தில் ரூ. 1.14 கோடியில் 9 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணி ஆகியவற்றின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதையொட்டி, தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் வே.சமா்பதி, உதவி ஆணையா் உதயகுமாா், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கௌதமன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், செயல் அலுவலா்கள், ஆய்வா்கள், சிவசுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com