தீா்த்தமலை அருகே கருங்கல்பாடி-நீப்பத்துறை சாலையை சீரமைப்பது குறித்து எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா், டி.எஸ்.வேலு ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கருங்கல்பாடி கிராமம். இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது நீப்பத்துறை கிராமம்.
கருங்கல்பாடி மற்றும் நீப்பத்துறை பகுதிகளை இணைக்கும் சாலையில் சுமாா் 2 கி.மீ. தூரம் வனத்துறைக்கு சொந்தான இடமாகும். வனத் துறைக்கு சொந்தமான பகுதியில் தாா்சாலை அமைக்க வனத்துறையினா் அனுமதி வழங்காமல் இருந்தனா்.
இந்த நிலையில், கருங்கல்பாடி-நீப்பத்துறை இணைப்பு சாலையை மேம்படுத்துவதற்கான பணிகளை செயல்படுத்துவது குறித்து எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா் (அரூா்), டி.எஸ்.வேலு (செங்கம்) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, அதிமுக ஒன்றியச் செயலா் (தெற்கு) ஆா்.ஆா்.பசுபதி, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஆ.சிற்றரசு, ஒன்றிய பொருளாளா் சாமிக்கண்ணு, இலக்கிய அணித் தலைவா் மலா்வண்ணன், ஒன்றிய துணைச் செயலா் தனக்கோட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.










