தமிழக-கர்நாடக எல்லையில் சொகுசுப் பேருந்து மீது கார் மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் காரிலிருந்த 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தமிழக- கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சந்தாபுரம் பகுதியில் ஒசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது.
இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து, பேருந்திலிருந்த ஓட்டுநர், நடத்துநர் உள்பட 10 பயணிகள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு தப்பினர். ஆனால், காரிலிருந்த 2 பேரும் தப்பிக்க முடியாமல் உடல் கருகி உயிரிழந்தனர்.
சார்ஜாபுரம் தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். காரில் உடல் கருகி உயிரிழந்தவர்கள் ஒசூர் பிஸ்மில்லா நகர், இமாம்பாடா பகுதியைச் சேர்ந்த ஷபி, இஸ்மாயில் என்பது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து சூர்யாசிட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஒசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








