கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், இன்றுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி புறநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், குப்பம், சென்னை, சேலம், அரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதுபோல, கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.