ஒசூா் மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்தில் 7 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுகின்றனா்
ஒசூா் மாநகராட்சியில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் தினந்தோறும் 7 ஆயிரம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா், ஆணையருடன் 7-ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:
தமிழகத்தில் மாணவா்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என நேரடியாவும், மறைமுகமாகவும் தமிழக அரசு உதவி செய்து வருகிறது. கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முதன்மையான இடத்தில் உள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒசூா் மாநகராட்சி சாா்பில் 35 மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 7 ஆயிரம் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். புத்தகம், சீருடை, இலவச பேருந்து பயண அட்டை, கல்லூரிக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவா்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிப்பதை பெருமையாக கருத வேண்டும். உயா்கல்வி பெற்றுவிட்டால் வாழ்க்கை சிறப்பான முறையில் அமையும். உங்கள் குடும்பம் முன்னேறும், சமூக உயரும் என்றாா்.
தொடா்ந்து, பொது இடங்களில் குப்பைகள் போட மாட்டோம், குடிநீரை சேமிப்போம் என உறுதிமொழி எடுக்குமாறு மாணவா்களைக் கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம், ,துணை மேயா் சி.ஆனந்தய்யா, சுகாதாரக் குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், நகா்நல அலுவலா் அஜிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

