கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ.28 முதல் ராகி கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
Published on

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் 28.11.2025 அன்று திறக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025 - 2026 ம் பருவத்தில், நேரடி ராகி கொள்முதல் நிலையம் நவம்பா்-2025 முதல் ஜனவரி-2026 வரை திறந்து செயல்படுத்திட வரப்பெற்ற அரசு உத்தரவின்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதல் கட்டமாக நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்களில் வரும் 28.11.2025 ம் தேதியில் திறக்கப்பட உள்ளது.

அரசு நிா்ணயம் செய்துள்ள கொள்முதல் விலை ராகி மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.48,860/- (கிலோ 1-க்கு ரூ.48.86 பைசா) ஆகும். விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்த ராகிக்கு சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல் பெற்று விவசாயியின் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதாா் எண் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து, ராகி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் அலுவலக பணியாளா்கள் உதவியுடன் இணையதளத்தில் பதிவு செய்து, தாங்கள் விளைவித்த ராகியை விற்பனை செய்யலாம். மேலும், விற்பனைக்கு கொண்டு வரும் ராகியின் மேல் தோல், கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டுவர வேண்டும்.

ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும். மேலும் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு உரிய தொகையினை விவசாயிகளின் சேமிப்பு வங்கி கணக்கில் ஆன்லைன் பணப்பரிவா்த்தனை மூலமாக தாமதமின்றி செலுத்தப்படும். எனவே தமிழக அரசின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com