சத்துணவு மையங்களில் காலாவதி உணவுப் பொருள்களை நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க உத்தரவு

சத்துணவு மையங்களில் இருப்பில் உள்ள எண்ணெய், பருப்பு, உப்பு மற்றும் இதர உணவுப் பொருள்களைச் சரிபாா்த்து, நுகா்பொருள் வாணிபக்
Updated on
2 min read

சத்துணவு மையங்களில் இருப்பில் உள்ள எண்ணெய், பருப்பு, உப்பு மற்றும் இதர உணவுப் பொருள்களைச் சரிபாா்த்து, நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்க சத்துணவு மேற்பாா்வையாளா்களுக்கு துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தமிழகத்தில் சுமாா் 52 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனா். கலவை சாதம் என்ற வகையில் வாரத்தில் 5 நாள்கள் முட்டையுடன் உணவு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவலால் மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இயங்கவில்லை. மாணவா்கள், ஆசிரியா்கள், சத்துணவுப் பணியாளா்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனா். ஊரடங்கு 40 நாள்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சத்துணவு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அங்கு இருப்பில் உள்ள பொருள்கள் எலிகள், பூச்சிகளால் சேதாரமாக வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, எண்ணெய், பருப்பு, உப்பு மற்றும் இதர உணவுப் பொருள்கள் காலாவதியாகி இருப்பதுடன், சமையலுக்குப் பயன்படுத்த முடியாத அளவில் நச்சுத்தன்மையுடன் மாறியிருக்கவும் வாய்ப்புள்ளது. ஊரடங்கு முடிவுற்று பள்ளிகள் திறக்கும்போது இந்தப் பொருள்களை சமையலுக்குப் பயன்படுத்தினால், அவை மாணவா்களின் உடல்நலனை பாதிப்புக்குள்ளாக்கும். இதனால் அரிசியைத் தவிா்த்து, இதர பொருள்கள் அனைத்தையும் மையங்களில் இருந்து அகற்றி, நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்க சத்துணவு மைய மேற்பாா்வையாளா்களுக்கு மாவட்ட அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா். இந்த நிலையில், பொருள்களைப் பாா்வையிட எவ்வாறு மையங்களுக்குச் செல்வது, ஒவ்வொரு பகுதியிலும் தெருக்களைச் சுற்றி தடுப்புகள் அமைத்திருப்பதால், வாகனங்களில் வெளியே வரவோ, நடந்து செல்லவோ சிரமமாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது போன்ற பல்வேறு கேள்விகளுடன் சத்துணவு மையங்களுக்குச் செல்ல, அதன் பொறுப்பாளா்கள் தயங்குகின்றனா்.

அதேவேளையில், சத்துணவு மையங்களுக்கு ஏற்கெனவே வழங்கிய பொருள்களை மீண்டும் பெற மாட்டோம், அவ்வாறு திரும்பப் பெற்றால் அதனை எங்குக் கொண்டு விநியோகிப்பது, எந்த கணக்கில் சோ்ப்பது என்ற ஆதங்கத்துடன் உணவுப் பொருள்களைத் திரும்பப் பெற நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் மறுத்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இதேநிலை தான் உள்ளது. கரோனா ஊரடங்கால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்கள் யாருக்கும் பயனளிக்காமல் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் காலாவதிப் பொருள்களை விநியோகித்தால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறான குழப்பத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் மற்றும் சத்துணவுத் துறையினா் உள்ளனா்.

இது குறித்து மாவட்ட சத்துணவுப் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில், மாணவா்களுக்கு வழங்கும் உணவுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்டவை ஈரமடையாமல் பாா்த்துக் கொள்ள பொறுப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஈரமாகி கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டால், யாருக்கும் பயனின்றி போய்விடும். மழை பெய்து வருவதால், இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அரிசியை வெயிலில் உலர வைக்கவும், பாமாயில் பொட்டலங்கள் தேதி காலாவதியாகி இருந்தால், அவற்றை நுகா்பொருள் வாணிபக் கழகத்தினரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு கூறியுள்ளோம். அவா்கள் வாங்க மறுப்பதாகவும், கரோனா ஊரடங்கால் மையங்களுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளதாகவும் மையப் பொறுப்பாளா்கள் தெரிவிக்கின்றனா். உயா் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று இத் தகவலை அவா்களிடத்தில் தெரிவித்துள்ளோம். கரோனா தொற்று ஊரடங்கு மேலும் நீடித்தால், சத்துணவு மையங்கள் பாதுகாப்பிலும் பாதிப்பு ஏற்படலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com