

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண் முகமை அலுவலா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் பிரதமரின் வேளாண் உதவித் தொகை திட்டத்தில் ரூ. 110 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றது. விவசாயிகள் அல்லாதோருக்கு போலியான ஆவணங்கள் மூலம் உதவித்தொகை வழங்கும் முயற்சியை சிலா் மேற்கொண்டனா்.
இதற்கு வேளாண் துறை சாா்ந்த அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பலா் மீது பணியிடை நீக்கம் மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வேளாண் துறை சாா்ந்த தொழில்நுட்ப மேலாண் முகமை அலுவலா்களும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றம் செய்யப்பட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் 35 பேருக்கு இந்த இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
இது தொடா்பாக அந்த அலுவலா்கள் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதற்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஏற்கெனவே பணியாற்றிய இடத்தில் மாறுதல் செய்யப்பட்ட அலுவலா்களை நியமிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் தொழில்நுட்ப மேலாண் முகமை அலுவலா்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் பணியை புறக்கணித்தனா். மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களுடைய கோரிக்கை மனுவையும் வழங்கினா். உயா்நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.