நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த அரசு ஊழியர் திடீரென மரணமடைந்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை பல்வேறு துறை அலுவலர்களும் குறைதீர் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
அவர்களில் படைவீடு பேரூராட்சியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஆனந்தன்(54) என்பவரும் வந்திருந்தார். இயற்கை உபாதை கழிக்க கூட்டத்தில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் ஆம்புலன்சை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் போதிய அளவில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரணமடைந்த ஆனந்தனை மீட்டுச் செல்லும் காவல் துறையினர்.