இருக்கூர் அருகே நாய் ஒன்றை கடித்ததோடு மற்றொரு நாயை தூக்கிச் சென்ற மர்ம விலங்கால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டம், இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்ராஜா வீட்டு மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த சுமார் 30 கிலோ எடையுள்ள பசுங்கன்று குட்டியை மர்ம விலங்கு ஒன்று கடித்து மாட்டு தொழுவத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதனால் அப் பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு அதே பகுதியில் ராஜ்குமார் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த நாயை மர்ம விலங்கு கடித்துள்ளது. சந்தம் கேட்டவுடன் அங்கிருந்து ஓடியுள்ளது. இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் என்பவது வீட்டில் இருந்த நாயை தூக்கிச்சென்றுள்ளது. இது குறித்து ஏற்கெனவே வனத்துறையினர் மர்ம விலங்கின் பாத சுவடுகளை பதிவு செய்தும், கன்று குட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க- இடைத்தோ்தல்: இன்று ஒரே நாளில் 10 போ் மனுத் தாக்கல்
நாயை கடித்ததும், மர்ம விலங்கு குறித்து தகவல் தெரிவித்தும் உடனடியாக அதனை பிடிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்த பரமத்தி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேனுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரவியதால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.