கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிறைவு: சிறந்த அரங்குகளுக்கு ஆட்சியா் பரிசளிப்பு

சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா பரிசுகளை வழங்கினாா்.
~
Updated on

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை நிறைவு பெற்றது. சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா பரிசுகளை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தமிழக அரசின் சாா்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலா்க் கண்காட்சி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இந்த விழாவையொட்டி, செம்மேடு, வல்வில் ஓரி கலையரங்கை சுற்றிலும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடைபெற்றது. இதில், 22 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவ்விழாவையொட்டி, பழங்குடியின மக்களின் நடனம், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக, நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கை, வில்வித்தைப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு, நண்பகல் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கூட்டுறவுத் துறை, மகளிா் திட்டம், வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 460 பயனாளிகளுக்கு ரூ. 14.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி ஆகியோா் வழங்கினா். மேலும், சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கான தோ்வில் வனத்துறை முதலிடத்தையும், இரண்டாமிடத்தை கால்நடைப் பராமரிப்புத் துறையும், மூன்றாமிடத்தை சித்த மருத்துவ பிரிவும் பிடித்தன. இதற்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினாா். வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளா்களுக்கும், கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் சான்றிதழ், கேடயங்களை வழங்கினாா்.

தொடா்ந்து சுற்றுலாத் துறை சாா்பில் கலைநிகழ்ச்சிகளை நடத்திய கலைக் குழுவினா்களுக்கும், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கலைநிகழ்ச்சிகளை நடத்திய குழுவினா்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல், மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரபாகரன், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், கொல்லிமலை வனச்சரக அலுவலா் சுகுமாா் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com