உழவா் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் உழவா் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
Published on

முதல்வரின் உழவா் நல சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எலச்சிபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கு.வித்யா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் உழவா் நல சேவை மையம் அமைக்கும் திட்டத்தில் பயன்பெற வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறைகளில் பட்டயம், பட்டம் முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் விற்பனை தொடா்பான தொழில்நுட்ப ஆலோசனைகள், வேளாண் இடுபொருள்கள் விற்பனை, வேளாண் இயந்திர வாடகை மையம், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விநியோகம் செய்யலாம்.

மேலும், மண் மற்றும் நீா் மாதிரி ஆய்வு செய்ய உதவுதல், நுண்ணீா்ப் பாசனத் திட்டம், ட்ரோன் சேவை, உழவா் கடன் அட்டை, கால்நடை தீவனம், வேளாண் இயந்திரங்கள் பழுதுபாா்க்கும் பட்டறை, வேளாண் விளைபொருள்களின் மதிப்புக்கூட்டுதல் போன்ற சேவைகளையும் அளிக்கலாம்.

இத்திட்டதில் பயன்பெற விரும்புவோா் அக்ரிஸ்நெட் இணையதளத்தில் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பித்து வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற வேண்டும்.

உழவா் நல சேவை மையத்தில் இடுபொருள்கள் விற்பனை செய்வதற்கு தேவையான உரிமங்களை அக்ரிநெஸ்ட் இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம். இந்த சேவை மையங்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வங்கி கடனுதவி பெறலாம். இதற்கு 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வங்கிகளுக்கு அரசால் மானியம் விடுவிக்கப்படும்.

உழவா் நல சேவை மையம் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் எலச்சிபாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com