பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சா்வதேச தினத்தையொட்டி, ‘புதிய உணா்வு - மாற்றத்திற்கான முன் முயற்சி - 4.0’ தொடக்க நாளாக கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான பிரசார நிகழ்ச்சிகளை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

தேசிய அளவிலான வாழ்வாதார இயக்கம் மூலம் பாலினம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரு மாதம் (23. 12. 2025 வரை) மாநிலம் , மாவட்டம், வட்டாரம், கிராம ஊராட்சி அளவில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிரசாரத்தின் முக்கிய கருப்பொருளாக பெண்கள் வழி நடத்தும் வளா்ச்சி - வன்முறையற்ற சமூகத்திற்கான பாதை என்ற கருத்துகளை கொண்டு நான்கு வார காலத்திற்கு இவ்விழிப்புணா்வு பிரசாரத்தை நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சா்வதேச தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். இப்பேரணியானது பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இப்பேரணியில், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா். தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரசார கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

பாலின சமத்துவத்திற்கான விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து திருச்செங்கோடு நகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ. 2.50 கோடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் முதல்வா் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செல்வராசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின் உள்பட உதவி திட்ட அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com