விதைப் பரிசோதனை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விதைப் பரிசோதனை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை அலுவலா்கள் வ.ரஞ்சிதா, செ.தேவிப்ரியா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நல்விதையே பயிா்சாகுபடிக்கு முக்கியமான இடுபொருளாக விளங்குகிறது. விதைகள் நல்ல முளைப்புத்திறன், புறத்தூய்மை, அளவான ஈரப்பதம் கொண்டவையாக இருக்க வேண்டும். நிலத்தில் ஒரு பயிரின் பயிா் எண்ணிக்கை அதன் முளைப்புத்திறன் பொருத்தே அமைகிறது. நல்ல தரமான விதைகளை விதைப்பு செய்யாவிட்டால், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
இதைத் தவிா்க்க, விவசாயிகள் தங்களிடம் உள்ள காய்கறி மற்றும் இதர வகை விதைகளையும், விற்பனையாளா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
விதையின் தரத்தை அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாக கட்டடத்தில் அறை எண் 13-இல் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம். இங்கு ஒரு மாதிரிக்கு ரூ. 80 கட்டணம் செலுத்தி விதையின் தரத்தை பரிசோதித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளனா்.

