தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு பல்வேறு தீத்தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு, அவசரகால அழைப்புகள் மற்றும் பேரிடா் காலங்களில் செயல்படுவது குறித்த அடிப்படை பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் காலை 10.30 முதல் நண்பகல் 1 மணிவரை நிலைய அலுவலா் ரா.நல்லதுரை பயிற்சி அளித்தாா். இதில், பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், தீ பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் தீயணைப்பு நிலையம் மட்டுமின்றி ராசிபுரம், குமாரபாளையம், கொல்லிமலை, வெப்படை, திருச்செங்கோடு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலும் அடிப்படை தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு நிலைய எல்லைக்கு உள்பட்ட தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் பங்கேற்றனா்.

