காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் 3 போ் கைது
பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கதவணை அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா், தலைமைக் காவலா் ஜான்பாட்சா மற்றும் போலீஸாா் புதன்கிழமை குப்புச்சிபாளையம், பொய்யேரி, நன்செய் இடையாறு ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் சிலா் வெடி வைத்து மீன் பிடிப்பதகாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கதவணை பகுதியில் வெடி வைத்து மீன் பிடித்திருந்த 2 போ் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையம், பொய்யேரி பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் சிவசங்கா் (38), பரமத்தி வேலூா், தெற்கு நல்லியாம்பாளையத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமச்சந்திரன் (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் மீன் பிடிப்பதற்காக காவிரி ஆற்றில் வெடி மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த வெடிமருந்தை மோகனூா் வட்டம், நன்செய் இடையாறு பகுதியை சோ்ந்த பூபாலனிடமிருந்து (36) வாங்கியதாக அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து பூபாலனை போலீஸாா் கைது செய்தனா். மூவரிடமிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
