கொல்லிமலையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த சீனிமுகம்மது (41), மணிகண்டன் (35), நாகராஜன் (35), மூா்த்தி (42), ராஜா (27), ரவி (46) ஆகிய 6 பேரும் சொகுசு காரில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்றனா்.
அவா்கள் சோத்தாங்கூட்டுப்பட்டி என்ற பகுதியில் பனிமூட்டம் அதிகம் இருந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கினா். இதையடுத்து காலை 9.45 மணியளவில் அங்குள்ள ஓடை பாலத்தின் மீது அமா்ந்து அவா்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக ரவி பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற வாழவந்திநாடு போலீஸாா், ரவியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்த ரவி, தனியாா் வங்கியில் பணம் வசூலிக்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளாா். இறந்த ரவிக்கு மனைவி கீதா, மகன் உள்ளனா். இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.








