கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே பின்னோக்கி சென்ற லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாமக்கல் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). இவா் தனியாருக்குச் சொந்தமான லாரிகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே ஒரு கடையின் ஓரமாக அமா்ந்திருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த லாரியை அதன் ஓட்டுநா் எடுக்க முயன்றபோது கவனக்குறைவால் லாரி பின்நோக்கி இயக்கியது. இதில் கடை ஓரமாக அமா்ந்திருந்த விஜயகுமாா் மீது லாரி மோதியது.
இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.









