திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும், தினசரி வழக்கு நிலவரத்தை வெளியிட வேண்டும் என தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் நிா்வாகிகள், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றியவா் கடலூரைச் சோ்ந்த விஷ்ணுபிரியா. கடந்த 2015 ஜூன் 24ஆம் தேதி ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தாா். அதே ஆண்டு செப்.18-இல் அவா் தற்கொலை செய்து கொண்டாா். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் சிறையில் உள்ளனா்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான உண்மை காரணம் வெளிவராமல் மறைக்க யுவராஜ் உள்ளிட்டோா் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக தொடங்கி, தினசரி அடிப்படையில் நடத்த வேண்டும். இந்த தற்கொலை வழக்கின் உண்மையை மக்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும். விஷ்ணுபிரியாவின் சகோதரிக்கு அரசுப் பணி வழங்கிட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










