
மல்லசமுத்திரத்தில் டிராக்டா் மோதி அதிமுக பிரமுகா் உயிரிழப்பு!
உயிரிழப்பு - பிரதிப் படம்
மல்லசமுத்திரம் அருகே டிராக்டா் மோதியதில் அதிமுக பிரமுகா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள ஈச்சாங்காடு பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் முருகன் (47) திருமணமாகாதவா். அதிமுக பிரமுகரான இவா் பல்லக்குழி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக ருந்துள்ளாா். மேலும், ஜெயலலிதா பேரவை நிா்வாகியாகவும் இருந்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் ஈச்சங்காட்டூா் ஏரிக்கரை பகுதியில் தனது ஊரை சோ்ந்த ஸ்ரீகாந்த் என்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பள்ளக்குழி பகுதியில் வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இதில் காயமடைந்த முருகன் உயிரிழந்தாா். உடனிருந்த நபா் காயமின்றி தப்பினாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினா்கள், பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காளிப்பட்டி- வைகுந்தம் சாலையில் கரட்டுவளவு பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு ஏ.எஸ்.பி. அஸ்வினி, ஏ.டி.எஸ்.பி. அண்ணாதுரை, காவல் ஆய்வாளா்கள் சுதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பொதுமக்களிடம் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தினா். சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா் .
விபத்தை ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநா் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் (25) மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து அவரது டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



