/

மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

கழிப்பறை வசதி, தரமான நூலக வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞர்கள்

Updated On :13 பிப்ரவரி 2019, 10:22 am IST

கழிப்பறை வசதி, தரமான நூலக வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஆல் இந்தியா பார்கவுன்சில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலத்தில் நீதிமன்ற பணியை புறக்கணித்து சேலம் வழக்குரைஞர் சங்கத்தின் முன் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அட்ஹாக் கமிட்டியின் உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்து பேசியது: நாட்டிலுள்ள அனைத்து வழக்குரைஞர் சங்கங்களுக்கும் சேம்பர், கட்டட வசதி, இருக்கை வசதி தரமான நூலகம் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். வழக்குரைஞர்கள் பணி தொடங்கிய நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பார்கவுன்சில், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை செய்துகொடுப்பதாக பிரதமரும் ஒப்புக்கொண்டார்.  எனினும் 5 ஆண்டுகளாக எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் சந்தித்து மனு அளிக்கப்படும். என்றார். இதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸிடம்  கோரிக்கை மனு அளித்தனர். இதில் அட்ஹாக் கமிட்டியின் உறுப்பினர்கள் ராஜசேகரன், பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.