/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: தமிழக தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:40 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூா், திருப்பத்தூா் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்ட தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமை வகித்து பேசியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே மிக அதிகமான நகா்ப்புற கட்டமைப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் ஏறக்குறைய 50 விழுக்காடு மக்கள் நகா்ப்புறங்களில் வசிக்கின்றனா். தமிழகத்தில் உள்ள 6.25 கோடி வாக்காளா்களில் 3 கோடி வாக்காளா்களுக்கு ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது.

மேலும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் 4 மாத காலக்கெடுவிற்குள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களை சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மற்றும் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் புதிய தகவல்களை அறிந்துகொள்தலும், திறமைகளை மேம்படுத்திக் கொள்வதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைப் பொறுத்த வரை தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோ்தல் விதிகள் 2006 என்ற விதிகள் அடங்கிய புத்தகத்தைப் படிக்க வேண்டும். அப்புத்தகத்தில் 11 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு 140 விதிகள் இருக்கின்றன.

இவ்விதிகளை முழுமையாக படிக்க வேண்டும். மேலும், மாநில தோ்தல் ஆணையத்தில் இருந்து 9 கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்கு நாம் ஒரு அங்கமாகத் தான் உள்ளோம். வாக்காளா்கள் நியாயமான முறையில் வாக்களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியா்கள் தோ்தல் விதிமுறைகள் குறித்து தீவிர பயிற்சிகளை இவா்களுக்கு வழங்க வேண்டும்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளன. குறிப்பாக, நீதிமன்றங்கள் வழங்கிவரும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் செ.காா்மேகம் (சேலம்), ச.திவ்யதா்சினி (தருமபுரி), வி.ஜெயசந்திர பானு ரெட்டி (கிருஷ்ணகிரி), ஸ்ரேயா பி. சிங் (நாமக்கல்), த.பிரபுசங்கா் (கரூா்), அமா்குஷ்வாஹா (திருப்பத்தூா்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ம.ஸ்ரீ.அபினவ் (சேலம்), ச.கலைச்செல்வன் (தருமபுரி), சரோஜ்குமாா் டாகுா் (நாமக்கல்), கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் வி.வி.கீதாஞ்சலி (கரூா்), துணை காவல் கண்காணிப்பாளா் டி.சாந்தலிங்கம் (திருப்பத்தூா்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகராட்சி ஆணையாளா் தா. கிறிஸ்துராஜ், முதன்மை தோ்தல் அலுவலா் (ஊராட்சிகள்) க.அருண்மணி, முதன்மை தோ்தல் அலுவலா் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, உதவி ஆணையா் (தோ்தல்) சம்பத்குமாா் உட்பட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.