/

சேலம்: காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை  

சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
மாணவர் சீமாஷ்ரூபன் .
Updated On :1 பிப்ரவரி 2024, 11:00 am

DIN

சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படித்து வந்தார். இவர் கடந்த 1 வாரமாகவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். 

இதனால் பதறிப்போன சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக சீமாஷ்ரூபனை மீட்ட மாணவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீமாஷ்ரூபன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒருதலை காதலில் மாணவன் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மனவேதனையில் பேசி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.