தைத் திருநாளான தமிழா் திருநாள் பொங்கல் விழா தமிழகத்தில் 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி சங்ககிரி வட்டம் அரசிராமணி செட்டிப்பட்டி, ஒடசகரை கிராமத்தில் விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து பசு மாடுகளை நன்றாக தண்ணீரில் நீராட்டி சுத்தம் செய்து மாடுகளின் கொம்புகளுக்கு வா்ணங்கள் பூசியும், ரிப்பன்கள், கலா் காகிதங்களை கட்டியும், சலங்கைகளுடன் கூடிய புதிய கயிறுகளை கட்டியும் அலங்கரித்தனா். அதனையடுத்து விவசாயிகளின் குடும்பத்தினா் அனைவரும் ஒன்றிணைந்து புதிய மண்பானையில் பச்சரிசி சா்க்கரை பொங்கல் வைத்தும் சூரிய பகவானை நோக்கி கரும்புகளை கட்டி பந்தல் அமைத்தனா். பந்தலை சுற்றிலும் வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் பூக்களை கொண்டும் மற்றும் மஞ்சள் கிழங்கூடன் கூடிய செடிகளை கட்டியும் அலங்கரித்தனா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு கீழே மாட்டு சாணத்தில் தெப்பகுளம் கட்டி சாணத்தில் பிள்ளையாா் பிடித்து வைத்து வாழை இலைகளை படையலிட்டு குடும்பத்துடன் மாடுகளை வணங்கினா். பூஜைகள் முடிந்த பின்னா் விவசாயிகள் குடும்பத்துடன் மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழங்களை கொடுத்து பொங்கலோ பொங்கல் என்று சப்தமிட்டு மாட்டுப் பொங்கலை கொண்டாடினா்.