கரோனா காலத்தில் பணி அமர்த்தபட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செவிலியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நோய் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் கூடுதலாக செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அதிரடியாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகள் பணி செய்து வந்த அவர்களது பணி நேற்றுடன் நிறைவடைந்ததாகக் கூறி அனைவரையும் பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க: நந்தா பெரியசாமி படத்தில் பிரபல யூடியூபர்!
தமிழக அரசின் இந்த உத்தரவினால் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா 3-வது அலை காலத்திலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மருத்துவக் கவுன்சிலால் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி செய்து வந்தனர். இது போன்ற செவிலியர்கள் தமிழகம் முழுவதும் 2400-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது தமிழக அரசு அவர்களை பணியிலிருந்து விடுவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் கரோனா காலத்தில் தேவதைகளாக நினைத்த எங்களை தெருவில் விட்டுவிட்டனர் என வருத்தம் தெரிவித்தும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தாங்கள் தெருவுக்கு வந்து உள்ளதாகவும், இதனால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு தங்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்