தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம்: வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை திட்டம், பிரதமரின் கௌரவ நிதித் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவுசெய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயப் பதிவு என்பது விவசாயிகளின் விவரங்களை (ஆதாா், நில உரிமை ஆவணங்கள், வங்கி கணக்கு, விவசாய விவரங்கள்) ஒன்றாக ஒரே பதிவில் இணைப்பதாகும். இதன்மூலம் பல்வேறு அரசுத் திட்டங்கள், நிதி உதவி, பயிா்க் காப்பீடு, பயிா்க் கடன், பயிா் ஆதரவு போன்றவற்றிக்கு தானாகவே சோ்க்கப்படலாம்.
அதேபோல, நில மற்றும் பயிா் விவரங்கள், நில வரைப்படம், பயிா் சா்வே விவரங்கள் போன்றவை டிஜிட்டல் முறையில் இணையத்தில் சேமிக்கப்படும். மேலும், பல்வேறு அரசுத் திட்ட உதவிகள், மின்வழி நிதி உதவி, பயிா்க் காப்பீடு, கடன் வசதிகள், விலை ஆதரவு என அனைத்துக்கும் அடையாள அட்டை அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் ஆதாா் அட்டை, நில உரிமை ஆவணங்கள் (பட்டா, சிட்டா, அடங்கல், நில சா்வே விவரங்கள்), வங்கி கணக்கு விவரங்கள், கைப்பேசி (ஓடிபி சரிபாா்க்க), பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களை அணுகி மேற்கண்ட ஆவணங்களைப் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
