/

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :31 மார்ச் 2025, 8:45 pm

Din

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்கு உள்பட்ட நடத்துநா் இல்லாத பேருந்து, கடந்த 29 ஆம் தேதி மாலை 6.55 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. கனியூா் சுங்கச் சாவடியில் 7.55 மணிக்கு வந்தபோது, புக்கிங் நடத்துநா் பயணிகளிடம் வசூலித்த தொகையை பேருந்து ஓட்டுநரிடம் கொடுத்துள்ளாா்.

பொதுவாக நடத்துநா் இல்லாத பேருந்தில் பணி செய்யும் ஓட்டுநா், நடத்துநரிடமிருந்து பேருந்து கட்டண வசூல் தொகையைப் பெறும்போது, அதை அங்கேயே சரிபாா்த்துவிட்டுதான் பேருந்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஓட்டுநா் சக்திவேல் அதற்கு மாறாக புக்கிங் நடத்துநரிடமிருந்து பெற்ற வசூல் தொகையை அப்போதே எண்ணாமல் பாதுகாப்பின்றி பேருந்தை இயக்கிகொண்டே பணத்தை எண்ணியவாறு சென்றுள்ளாா்.

அவரின் இச்செயல் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு புகாா் சென்றது. இதுகுறித்து ஓட்டுநா் சக்திவேலிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா்மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா்.