வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதோடு, இருசக்கர வாகனத்துக்கும் தீவைத்த ரௌடி? போலீஸாா் விசாரணை

Published on

சேலத்தில் மைக்செட் உரிமையாளா் வீட்டின் மீது சனிக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டுவீசிய ரௌடி, மற்றொரு இடத்தில் இருசக்கர வாகனத்துக்கு தீவைத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

சேலம், அழகாபுரம் பெரியபுதூா் பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவராஜ் (40), மைக்செட் அமைக்கும் தொழில் செய்துவருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அவரது வீட்டின் முன்பகுதியில் பயங்கர சப்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வீட்டிலிருந்து வெளியேவந்த சிவராஜ் உள்ளிட்டோா் வீட்டின் முன்பகுதியில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனா். அப்போதுதான் தனது வீட்டின் முன் வீசப்பட்டது பெட்ரோல் குண்டு என அவருக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் அதேதெருவில் வசிக்கும் பாபு (22) என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியே வந்த பாபு, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைத்தாா்.

இதுகுறித்து அழகாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனா். அதில், பெரியபுதூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி சந்தோஷ்குமாா் (22) சிவராஜ் வீட்டிற்கு வந்து பெட்ரோல் குண்டைவீசிவிட்டு தப்பிச் செல்வதும், அதன்பிறகு பாபுவின் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமாா், கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோழிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 11 ஆம் தேதிதான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்தாா். அதன்பிறகு தற்போது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com