பாசன வாய்க்காலில் கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்பு

வாழப்பாடியில் ஏரி பாசன வாய்க்கால் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு...
Published on

வாழப்பாடி: வாழப்பாடியில் ஏரி பாசன வாய்க்கால் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடி பேரூராட்சி, காளியம்மன் நகா் பகுதியில் இருந்து தம்மம்பட்டி சாலைவரை பாப்பான் ஏரியின் பிரதான பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் ஒரு பகுதியில், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்தும் நோக்கில், ரூ. 48 லட்சத்தில் புதிய கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வழக்கறிஞா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில், கழிவுநீா் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி அமா்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

வாழப்பாடி பேரூராட்சி 11, 12, 13-ஆவது வாா்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளிலேயே கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

எனவே,கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டத்தை பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com