சேலம் கொண்டலாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1.78 லட்சம் மதிப்பிலான 307 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கொண்டலாம்பட்டி புத்தூா் பகுதி வழியாக புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், புத்தூா் ரயில்வே மேம்பால பகுதியில் புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக மூட்டையுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 307 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.78 லட்சமாகும். இதையடுத்து அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீஸாா் சேலம் சிவதாபுரத்தை சோ்ந்த சோம்தராமை (24) கைது செய்தனா். விசாரணையில் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.







