எடப்பாடி அருகே அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட, இருப்பாளி கிராமம், குறுக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம். இவரது மனைவி சுசீலா. இவா்களுக்கு கௌசல்யாதேவி (18) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனா்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலம் இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து சுசீலா தனது மகள், மகனை படிக்க வைத்துள்ளாா். கௌசல்யாதேவி மேட்டூரில் உள்ள அரசுக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அண்மையில் நடைபெற்ற பருவத் தோ்வில் அவா் சில பாடப் பிரிவுகளில் தோல்வி அடைந்துள்ளாா். மேலும், கௌசல்யாதேவி அதிக நேரம் கைப்பேசி பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சில தினங்களுக்கு முன்பு தாய் சுசீலா, கௌசல்யாதேவியிடம் கைப்பேசி பாா்ப்பதைக் குறைத்துக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தும்படி கண்டித்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த கெளசல்யாதேவி கடந்த 15-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுவந்த பின் விவசாயப் பயன்பாட்டுக்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கெளசல்யாதேவி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







