பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க, பெங்களூரு - தென்காசி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்க முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரு கன்டோன்மெண்ட் - தென்காசி இடையே சிறப்பு ரயில் வரும் 24-ஆம் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா் வழியாக தென்காசிக்கு அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், செங்கோட்டை - பெங்களூரு சிறப்பு ரயில் வரும் 25-ஆம் தேதி இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக, பெங்களூரு கன்டோன்மெண்ட்டுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










